செலவோ குறைவு...தரமோ நிறைவு... ஆற்றுமணல், செங்கல் இல்லாமல் இயற்கையான ஆர்கானிக் வீடுகள்: பழமையுடன் புதுமை கலந்து அசத்தும் தம்பதிகள்
செலவோ குறைவு...தரமோ நிறைவு... ஆற்றுமணல், செங்கல் இல்லாமல் இயற்கையான ஆர்கானிக் வீடுகள்: பழமையுடன் புதுமை கலந்து அசத்தும் தம்பதிகள்

சேலம்: இயந்திர மயமான இன்றைய வாழ்க்கைச்சூழலில் மனிதர்களின் தேவைகளுக்கான ஓட்டமும் இயந்திரங்களை போலவே உள்ளது. பசியை போக்க பாஸ்ட் புட் உணவுகளை உண்டு, வெளிச்சம் இல்லாத அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசித்து, தனது உடலுக்கு தானே தீங்கு ஏற்படுத்திக் கொண்டு, அதற்கான நிவாரணத்தை தேடி அலைவதும் வாடிக்கையாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் மனிதர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும், அவற்றால் நிகழும் சமூக இடர்பாடுகளுக்கும் வசிக்கும் இல்லமே காரணம். இதை சரிப்படுத்தி விட்டால் மகிழ்ச்சியே நிலைக்கும் என்கின்றனர் இயற்கைக்கு மாசு விளைவிக்காத ஆர்கானிக் வீடுகளை அமைத்து அசத்தி வரும் ஆர்கிடெக் தம்பதிகள். சேலம் மாவட்டத்தின் இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காட்டில் சமீபகாலமாக கட்டப்பட்டு வரும் வீடுகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஆற்றுமணல், செங்கல் பயன்படுத்தாமல் கட்டப்பட்டு வரும் இந்த வீடுகள், பழமை மாறாமல் புதுமையை கொண்டு சேர்க்கும் கட்டிடக்கலை வல்லுநர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த வீடுகளை வடிவமைத்து வரும் ஆர்கிடெக் நிபுணர் கோமகள் அனுபமா கூறியதாவது:சேலத்தை சேர்ந்த எனக்கு சிறுவயது முதலே ஓவியம் என்றால் உயிர். இதனால் அது சார்ந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பி.ஆர்க் 5வருட படிப்பை முடித்தேன். பின்னர் எம்.ஆர்க் 2வருடம் முடித்து அதில் பிஹெச்டி பட்டமும் பெற்றேன். கணவர் சத்யநாராயணனும், இதே போல், படித்தவர் என்பதால் எங்களின் பணியும் அது சார்ந்தே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் வீடுகளுக்கான சுரண்டப்படும் ஆற்று மணலால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வறட்சி, செங்கல் சூளையில் எரிப்பதற்காக மரங்களை வெட்டுவதால் அழியும் பசுமை, எரிக்கும் போது பரவும் மாசு அபாயங்கள் குறித்த செய்திகளும், தகவல்களும் எங்களை தொடர்ந்து வேதனையில் ஆழ்த்தியது.
எனவே, ஆர்கிடெக் நிபுணர்களான நாங்கள், ஆற்றுமணல், செங்கலை பயன்படுத்தாமல் வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று சிந்தித்ததால் உருவானது தான் ஆர்கானிக் வீடுகள். பிரத்யேகமான பிளை ஆஸ்பிரிக் கற்களால் சுவர் எழுப்பி, கம்பிகளுக்கு பதில் புல்லட் கிளாப் முறையில் மேல்தளம் அமைக்கிறோம். சிமென்ட்டுக்கு பதில் பிளை ஆஸ்பரிக் பயன்படுத்தும் போது, வீட்டுக்குள் ஊருடுவும் வெப்பம் குறைந்து விடுகிறது. அதோடு மேல்தளத்தில் மண்பானை, மண்ஓடு, தேங்காய் ஓடு போன்றவற்றை பதிக்கும் போது வெப்பம் மேலும் குறையும். மேலும் இதை பார்க்கும் போது, பழமை மாறாத ஒரு புதுமையும் தெரியும். இதேபோல் வீடுகளின் தரையை மார்பிளுக்கு பதில், ஆத்தங்குடி பூக்கல் கொண்டு நிரப்புகிறோம். அற்புத கைவினை வண்ணங்களை கொண்ட இந்த கல், செட்டிநாட்டு வீடுகளில் பதிக்கப்பட்ட சிறப்பு கொண்டவை. இப்படி செங்கல், மணல், சிமென்ட், இரும்பு கம்பிகள் தவிர்த்து வீடு கட்டுவதால் கட்டுமானச் செலவில் 20சதவீதம் தானாகவே குறைந்து விடும். எளியமக்களும் பயன்பெறும் வகையில் 500 சதுரடிக்கும் குறைவாக கூட, இது போன்ற வீடுகளை அமைத்து தருகிறோம். இந்த நோக்கத்தோடு ஒரு குழு அமைத்து நாங்கள் கட்டி வரும் வீடுகளுக்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பது மகிழ்ச்சி-்க்குரியது.
இவ்வாறு கோமகள் அனுபமா கூறினார்.
சமூகத்தின் மகிழ்ச்சி வீட்டிலிருந்தே ஆரம்பம்
''ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு என்பது வாழ்வின் முக்கிய அங்கம். அதை நான்கு சுவர்கள் என்று குறைத்து மதிப்பிடக்கூடாது. அந்த நான்கு சுவற்றுக்குள் இருந்து தூயகாற்றை சுவாசித்து, ஆரோக்கியமாக மன மகிழ்ச்சியுடன் வெளிவரும் போது, அந்த மனநிலையிலேயே இந்த சமூகத்தையும் அணுகமுடியும். இப்படி ஒவ்வொரு மனிதரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து சமூகத்தில் கலக்கும் போது, நிச்சயமாக எந்த ஒரு வன்மமும் இருக்காது. ஒரு வீட்டில் ஒளி நிரம்பி காற்று பரவினால் அதை விட பெரிய வாஸ்து முறைகள் எதுவும் தேவையில்லை. நாங்கள் கட்டும் வீடுகளும் இதை கவனத்தி-்ல் வைத்தே உருவாகிறது,'' என்றும் பெருமிதம் கொள்கின்றனர் இந்த ஆர்கிடெக் தம்பதிகள்.
Comments
Post a Comment